‘’போதும் ,சார் எல்லாம் முடிஞ்சு போச்சு‘’ - ரசிகரின் பதிவுக்கு வார்னர் கொடுத்த அல்டிமேட் பதில்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்று ரசிகர் போட்ட பதிவுக்கு வார்னர் அளித்த கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 14 சீசன் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனால் இந்த தொடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மோசமானதாக அமைந்துவிட்டது.
இந்த சூழலில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 3 அரைசதங்களுடன் 289 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என 2 புதிய அணிகள் இணைய உள்ளதால், அனைத்து அணிகளின் வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
அதில் வரும் 30-ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்க உள்ள வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் ஹைதராபாத் அணி வார்னரை தக்கவைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேன் பேஜ் பதிவிட்ட பதிவுக்கு கீழே ரசிகர் ஒருவர், டாம் மூடி தலைமை பயிற்சியாளர் மற்றும் டேவிட் வார்னர் கேப்டனாக வேண்டுமென்றும் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு டேவிட் வார்னர் 'நோ தேங்க்ஸ்' என கமெண்ட் செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை ஓரம் கட்டியதால், வார்னர் இப்படி கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் போதுமடா சாமி என்னை விட்டுவிடுங்கள் என்ற முறையில் நோ தேங்க்ஸ் என டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.