ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் - டேவிட் வார்னர் அறிவிப்பு
ஐபிஎல் தொடரின் முதல் சிலப் போட்டிகளில் விளையாட மாட்டேன் என டேவிட் வார்னர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மட்டும் 2 வாரத்திற்கும் மேல் தாமதாக கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டதால் மாற்று ஏற்பாடுகளை அந்தந்த அணியினரே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அணியில் எடுக்கப்பட்ட முக்கிய வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரத்திற்கு பங்கேற்க போவதில்லை எனக்கூறியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் மரணம் கிரிக்கெட் உலகினரை உலுக்கிய நிலையில், டேவிட் வார்னரை வெகுவாக பாதித்துள்ளது.
சிறுவயது முதலே வார்னரின் ஹீரோவான வார்னே போன்று ஆக வேண்டும் என்பதற்காக தான் அவர் கிரிக்கெட்டிற்குள் வந்துள்ளார். சிறுவயதில் வீட்டின் சுவர்களின் வார்னேவின் புகைப்படங்களை தான் ஒட்டி வைத்திருப்பதை வார்னர் வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே வார்னேவின் இறுதிச்சடங்கு மார்ச் 30 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதில் கலந்துக் கொள்ள உள்ளதாக வார்னர் அறிவித்துள்ளார்.
இறுதிச்சடங்கு 30 ஆம் தேதி முடிந்தாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை எந்தவொரு வீரரையும் அயல்நாடு செல்ல அனுமதிக்கவில்லை. அதன்பின் ஏப்ரல் 5 ஆம் தேதி புறப்பட்டு இந்தியா வந்தாலும் 5 நாட்கள் குவாரண்டைன் இருந்த பின்னர் அணியுடன் இணைந்து விளையாட ஏப்ரல் 10 ஆம் தேதி ஆகிவிடும். 5 - 6 போட்டிகளை தவறவிடுவார். இதனால் டெல்லி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.