அடுத்த ஐபிஎல் போட்டியில் இவர் தான் அணியின் கேப்டன் - எந்த அணி தெரியுமா?
கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாக்காக வலம் வரும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரை அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் வீரரான பிராட் ஹாக் வெளிப்படுத்தியுள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்களும், கப்தில் 28 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் மார்ஸ் டேவிட் வார்னரை விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 77 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த டேவிட் வார்னரை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகிறது.
குறிப்பாக கடந்த மாத ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இருந்து முற்றிலுமாக கைவிடப்பட்ட டேவிட் வார்னர், டி.20 உலகக்கோப்பை தொடரில் தனது அணிக்காக விளையாடிய விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
டேவிட் வார்னரின் இந்த ஆட்டம் தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதால் முன்னாள் வீரர்கள் பலர் டேவிட் வார்னரை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்தவகையில், டேவிட் வார்னர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக், அடுத்த வருட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், 'ஆர்சிபி அணி வார்னரை எடுத்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஏனெனில் பெங்களூரு ஆடுகளம் வார்னருக்கு ஏற்றாற்போல் இருக்கும்.
அதுமட்டுமல்லாது கோலி கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் தேவை. எனவே அந்தவகையில், வார்னரை ஆர்சிபி அணி எடுக்க வாய்ப்புள்ளது' என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.