மாமியாரை திட்டம் போட்டு குத்தி கொன்ற மருமகள் - குடும்ப தகராறில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டில் குடும்ப தகராறில் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியை சேர்ந்த பத்தேசந்த் என்பவர் திருக்கழுக்குன்றம் சின்ன கடை வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி பிரேம் கன்வர், மகன் கமலேஷ் குமார் மற்றும் மருமகள் சுஜாதாவுடன் வசித்து வந்தார்.
இதனிடையே வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி மாலையில் அடகு கடையை அடைத்து விட்டு பத்தேசந்த் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது வீட்டில் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் பேரில், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
போலீசார் விசாரித்ததில கொலை நடந்த சில மணி நேரத்துக்கு முன்பு பிரேம் கன்வரின் மருமகள் சுஜாதாவின் காலில் அடிபட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜாதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். மேலும் போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த சுஜாதா மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
எனக்கு திருமணமான சில மாதத்திலிருந்து எனக்கும் எனது மாமியாருக்கும் சிறு, சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் என் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதற்காக பீகார் மாநிலத்தில் இருந்து எனது உறவினர்கள் 17 வயதுடைய 2 பேரை வரவழைத்து 2 நாட்கள் எனது வீட்டில் தங்க வைத்து ஆள் இல்லாத நேரம் பார்த்து 3 பேரும் சேர்ந்து கத்தியால் மாமியார் பிரேம் கன்வர் கழுத்தில் குத்தினோம். இதில் அவர் உயிரிழந்தார் என சுஜாதா தெரிவித்து்ள்ளார்.
மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுஜாதாவின் உறவினர்களை சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருந்தபோது, போலீசார் கைது செய்தனர்.