தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலையானது எப்படி? நாட்டை உலுக்கிய சம்பவம்!
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு - ஸ்ரீதேவி தம்பதி. இவரது மகள் ஹாசினி (6). கடந்த 2017ல் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.
தஷ்வந்த் விடுதலை
இந்நிலையில் கடந்த 2018ல் செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். பின் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி உறுதிப்படுத்தவில்லை. டிஎன்ஏ ஆய்வும் ஒத்துபோகவில்லை. எனவே முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டார். தற்போது, தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.
ஆனால் அவர் பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.