அதிபயங்கரமாக தொற்றக்கூடிய மூன்றாவது கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
ஏற்கனவே ஒரு திடீர்மாற்றம் பெற்ற இங்கிலாந்து வகை கொரோனா வைரஸ், தென்னாப்பிரிக்க வைரஸ் என இரண்டு வைரஸ்கள் உலகை கதிகலங்கவைத்துவரும் நிலையில், பிரேசில் நாட்டில் மூன்றாவதாக ஒருவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது போலவே, இந்த மூன்றாவது வகை கொரோனா வைரஸும் பயங்கரமாக தொற்றக்கூடியதாகும். இந்த பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க வகை வைரஸ்கள், உலகை கொஞ்சம் பயமுறுத்தித்தான் உள்ளன, காரணம், அவை தடுப்பூசிக்கு கட்டுப்படுவதில்லை என கருதப்படுகிறது.
அதே நேரத்தில், அவை அபூர்வமாகத்தான் உள்ளன என்பது ஆறுதலிக்கும் ஒரு விடயம் .இந்த புதிய பிரேசில் வகை வைரஸ், முதல்முதலில் ரியோ டி ஜெனீரோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியா உட்பட பல நாடுகள் இந்த புதிய பிரேசில் வைரஸ் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
புதிய பிரேசில் வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவுக்குள் நுழையாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தாக்கத்திலிருந்தே உலகம் இன்னமும் விடுபடாத நிலையில், பிரேசில் வகை கொரோனாவும் சேர்ந்து கொண்டு மக்களுடைய அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.