அடுத்த குறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான்: அமைச்சர் சாமு நாசர் பரபரப்பு பேச்சு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து, ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை பாயும் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அடுத்தடுத்து நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின், 2ஆம் ஆண்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற அமைச்சர் சாமு நாசர் இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்தினோம்.
அதை அதிமுக அரசு மறுத்தது. தற்போது, வெளிப்படை தன்மையுடன் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு, அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை குறித்து எழுப்பிய கேள்விக்கு, எஸ்.பி. வேலுமணியை அடுத்து,
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால், நிரூபித்து வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர், அதனால்தான் அவர்கள் பதறுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் எடுத்துச் சென்ற விவகாரம் குறித்து, முறையான விசாரணை நடந்து வருகிறது. அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை கடனில் தள்ளி விட்டுள்ளது. தற்போது, 80 ஆயிரம் போலி பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.