எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்ட முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்லவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதிமுகவின் பொன்விழா, சசிகலா விவகாரம், உள்ளாட்சி தேர்தல் மற்றும் புதிய அவை தலைவர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனைமேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இமயமலை போல இருக்கும் எங்களை பார்த்து பரங்கிமலை போல இருக்கும் சிலர் பேசுவது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது. எழுச்சியோடு அதிமுக பொன்விழாவை கொண்டாட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்றார். இதன்பின் பேசிய அவர், கட்சி தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள் என்றும் பல்வேறு சோதனைகளை தாண்டி மாபெரும் வெற்றிநடை போட்ட இயக்கம் அதிமுக தான்.
விமர்சனம் செய்தவர்களை எல்லாத்தையும் வீட்டிற்கு அனுப்பி, நாட்டிற்கு எப்போதுமே தேவை என்ற இயக்கமாக அதிமுக உள்ளது.
நான் அதிமுகவின் தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை, பதவி என்பது இரண்டாம் பட்சம் தான் என்றும் எந்த பதவியாக இருந்தாலும் நான் அதை பணியாகத்தான் நினைப்பேன் என குறிப்பிட்டார்.
மேலும், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.