துரோகத்தின் அடையாளம் என்றால், அது அண்ணன் ஓ.பி.எஸ் தான் - ஜெயக்குமார் காட்டம்
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 65 நிர்வாகிகள் பங்கேற்றதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் வியூகம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது -
அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
துரோகத்தின் அடையாளம் என்றால், அண்ணன் ஓ.பி.எஸ்-ஐ தான் சொல்ல வேண்டும். துரோகம் என்பது அவருடன் பிறந்த ஒன்று. அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.