‘தம்பி இதெல்லாம் தப்புப்பா’ - பள்ளி சீருடையுடன் திரையரங்கில் படம் பார்க்க வந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறிய வட்டாட்சியர்

tamil nadu school students covid restrictions caught in theatre bunking online classes
By Swetha Subash Jan 08, 2022 08:13 AM GMT
Report

கடலூரில் திரையரங்குகளில் ஆய்வின்போது பள்ளி சீருடையுடன் படம் பார்க்க வந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்த வட்டாட்சியர்.

உலகம் முழுவதும் கொரானா பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதேபோல் தமிழகத்திலும் திரையரங்குகள், உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு, பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க போன்றவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும்,

வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்லவும் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் நேற்று இரவு முதல் இரவு ஊரடங்கும் அமலாகி தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் பேருந்துகளில் வழக்கம்போல் பொதுமக்கள் பயணம் செய்து வருவதை காண முடிகிறது இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நேற்று இரவு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை காவல் துறையினர் முதல் நாள் என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்,

இனியும் ஊரடங்கு நேரத்தில் வெளியே தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில் நேற்று கடலூர் வட்டாட்சியர் பலராமன் தலைமையில் கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி

மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோர் கடலூர் பகுதியில் அமைந்துள்ள திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் தான் செயல்படுகின்றனவா என கண்காணிக்க கடலூரில் உள்ள திரையரங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழம் முழுவதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடலூர் உழவர் சந்தை அருகே உள்ள திரையரங்கில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பள்ளி சீருடையுடன் வந்த மாணவர்கள் சிலர் திடீரென திரையரங்க கதவினை திறந்து வெளியே ஓடினர்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அவர்களை அழைத்து, பள்ளி நடைபெறும் நேரத்தில் பள்ளி சீருடையுடன் மற்றும் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் இவ்வாறு திரையரங்கிற்கு வருவது தவறு எனவும்

இனிமேல் இவ்வாறு பள்ளி நேரங்களில் வெளியே வர கூடாது, எங்கு சென்றாலும் பெற்றோர்களுடைய அனுமதி பெற்று பின்னரே செல்ல வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.