ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.
இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உடனடியாக சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/A3nZSgYSf4
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 5, 2022
உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.