இப்போ எல்லாம் அழிந்துவிட்டதா? ப்ளே ஆஃப் சுற்று குறித்து மனம் திறந்த தோனி..!
15வது ஐபிஎல் போட்டியின் 55 லீக் போட்டி மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 87 ரன்களும்,ருத்துராஜ் கெய்க்வாட் 41 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஸ்ரீகர் பரத் (8) மற்றும் டேவிட் வார்னர் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் மிட்செல் மார்ஸ் (25), ரிஷப் பண்ட் (21) மற்றும் ஷர்துல் தாகூர் (24) ஆஇய மூன்று பேரை மற்றவர்கள் அனைவரும்,
சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 17.4 ஓவரில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மொய்ன் அலி, 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதே போல் முகேஷ் சவுத்ரி, சிம்ரஜித் சிங் மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி “நெட் ரன் பற்றி எல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது. படிக்கும் காலத்தில் இருந்தே கணக்கில் எனக்கு பெரிதாக கவனம் இருந்தது இல்லை.
நெட் ரன் ரேட் பெரிதாக எதற்கும் உதவாது, எனவே நான் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ஐபிஎல் தொடரை என்ஜாய் செய்து விளையாட வேண்டும், அதுவே முக்கியம்.
இரு அணிகள் மோதும் போது தேவையற்ற அழுத்தங்களை எடுத்து கொள்ளாமல் அந்த போட்டியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டம் இருந்தாலே போது. இந்த தொடரில் நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அது நல்ல விசயம் தான். ஆனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும், அதனால் ஒன்றும் இல்லை, இதனால் உலகத்தில் அனைத்தும் முடிந்து போக போவது இல்லை” என்று தெரிவித்தார்.