முதல் ஐபிஎல் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? - சென்னை, கொல்கத்தாவின் வரலாறு இதோ...!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கவுள்ள முதல் போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதிய நிலையில், சென்னை அணி 17 போட்டிகளும், கொல்கத்தா அணி 8 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி சார்பில் முன்னாள் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரூ ரஸலும் அதிக ரன்களை குவித்துள்ளனர்.
ஆனால் வான்கடே மைதான வரலாறை எடுத்துக் கொண்டால் அது கொல்கத்தாவுக்கு மோசமான அனுபவத்தையே கொடுத்துள்ளது எனலாம். கடைசியாக விளையாடிய 11 போட்டியில் 10 போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் ஐபிஎல் அணிகளிலேயே வான்கனடே மைதானத்தில் குறைந்த வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணியும் கொல்கத்தா தான்.
ஆனால் சென்னை அணிக்கு வான்கடே மைதானம் ராசியான ஒன்றாகவே உள்ளது.அங்கு கடைசியாக விளையாடிய 5 போட்டியில் 4 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த சென்னை வீரர் என்ற பெருமையை அம்பத்தி ராயுடு பெற்றுள்ளார்.
அவர் வான்கடே மைதானத்தில் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 885 ரன்களை விளாசியுள்ளார். இதன்மூலம் பொலார்டு, ரோகித் சர்மாவுக்கு பிறகு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார். இதேபோன்று ஆண்ட்ரூ ரஸல் பிராவோ பந்துவீச்சில் இதுவரை 23 சிக்சர் விளாசியுள்ளார்.
இப்படியான பின்னணியை கொண்ட இந்த மைதானத்தின் முதல் போட்டியில் சென்னை அணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.