சதமடித்த ருத்துராஜ் ஜெய்க்வாட் - ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த சென்னை அணி
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ருத்துராஜ் ஜெய்க்வாட் சதமடித்து அசத்தினார்.
அபுதாபியில் நடைபெற்று வரும் 47வது போட்டியில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தொடக்கம் முதலே அடித்து விளையாடியது. தொடக்க வீரர் டூ பிளிசிஸ் 25 ரன்கள், சுரேஷ் ரெய்னா 3 ரன்கள், மொயீன் அலி 21 ரன்கள், அம்பத்தி ராயுடு 2 ரன்கள் என ஒருபுறம் அவுட்டாக, மறுபுறம் ருத்துராஜ் ஜெய்க்வாட் சதமடித்து அசத்தினார்.
அவருக்கு பக்கப்பலமாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் விளாசினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திவேதியா அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.