வீரர்களை தக்கவைத்ததில் சென்னை அணி செய்த தவறு - சிக்கலில் மாட்டிய தோனி?
ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தக்கவைத்ததில் சென்னை அணி தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதன்படி சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.
ஆனால் சென்னை அணி எந்த பவுலரையும் தக்கவைக்கவில்லை. சமீப காலமாக சென்னை அணியில் விளையாடிய ஷர்துல் தாகூர், தீபக் சஹார் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
என்னதான் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் பவுலிங் செய்தாலும், ஆனால் வேகப்பந்து வீச்சாளர் என்பது எல்லா அணிகளுக்கும் தேவைப்படும் விஷயம். இதனால் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி சரியான வீரர்களை தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த சவால்களை எல்லாம் சமாளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.