கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது ஏன்? - வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதற்கான காரணம் குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே இன்றைய தினம் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 40 வயதாகும் தோனி இந்தாண்டு கேப்டன்சி செய்துவிட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன்சியில் இருந்து மட்டும் தற்போது விலகியுள்ளார். அதுவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பலரும் கேப்டன் பதவியில் இருக்கும் போதே தோனி ஓய்வு பெற்றிருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதற்கான காரணம் குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். அதில் தோனி கடந்த சில நாட்களாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலக யோசித்துக்கொண்டிருந்தார். தற்போது ஜடேஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல ஃபார்மில் உச்சத்தில் உள்ளார். இந்த நேரம் தான் அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்க சரியானது என தோனி முடிவெடுத்துள்ளார்.
சென்னை அணியின் எதிர்காலம் குறித்து எப்போதுமே தோனி யோசித்துக்கொண்டே தான் இருப்பார். கடந்தாண்டே ஜடேஜாவிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே தோனிக்கு பின்னர் ஜடேஜா சரியாக இருப்பார். அதேபோல் தோனியுடன் அவர் இருந்த அனுபவம், அணி குறித்த புரிதல், ஆகியவற்றால் கடந்தாண்டே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
சொல்லப்போனால் தோனி அனைத்திற்குமே சரியான நேரத்தை பார்ப்பார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் மிகவும் சுமூகமாக ஒப்படைத்து விட்டு பின்னர் கோலியை சில ஆண்டுகள் மேம்படுத்தினார். அதே நிலைமை தான் தற்போதும் உள்ளது. ஜடேஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவரை தயார் செய்யப்போகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜடேஜா சென்னையில் உள்ளதால் அவரின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.