வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சியை உயிருடன் சாப்பிட வைத்து கொடுமை - மருமகள் தற்கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு
குழந்தை இல்லாதததற்காக மருமகளுக்கு புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட கொடுத்ததால், கடலூர் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் வினோத்குமார் (33) இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சத்திற்கு சீர்வரிசைப் பொருட்கள், இருசக்கரவாகனம் ஆகியவை சீதனமாக வழங்கப்பட்டது. மேலும், ஆடி மாத சீராக 4 பவுன் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியாவிற்கு, பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 பவுன் நகையை அடமானம் வைத்திருக்கிறார்கள். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்த அன்று முதல் மாமனார் பழனி (53), மாமியார் ராஜேஸ்வரி (47), நாத்தனார் விந்தியா ஆகியோர் தொடர்ந்து சூர்யாவை விமர்சித்து வந்துள்ளனர்.
விந்தியாவிற்கு குழந்தை இல்லாததால், அவரை குறை கூறி வந்துள்ளனர். மேலும், குழந்தை இல்லாதததற்காக புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை சாப்பிட வைத்திருக்கிறார்கள்.
இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றார் சூர்யா. இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் சூர்யா புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் கணவன், மனைவியிடையே பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வினோத்குமாருடன் சூர்யாவை சேர்த்து வைத்தனர்.
பின்பு, கூடுதலாக 5 பவுன் நகை கேட்டதற்கு 4 பவுன் கொடுத்திருக்கிறார்கள். எனினும், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி 4 பேரும் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால், மனமுடைந்த சூர்யா கடந்த 14-3-2018 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், சூர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.