காதலியின் பிறந்த நாளுக்கு 50 லட்சம் ரூபாயில் வாழ்த்து - ரொனால்டோ வழங்கிய வித்தியாசமான பரிசு
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ தனது காதலியின் பிறந்த நாளுக்காக ரூ.50 லட்சம் செலவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ரொனால்டோவுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாட தனது காதலியான மாடலிங் நடிகையான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். ஜார்ஜினாவுக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசைக் கொடுக்க விரும்பிய ரொனால்டோ துபாயில் உள்ள உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் ஹேப்பி பர்த்டே ஜியோ என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படத்தை ஒளிரச் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
புர்ஜ் கலீபா கட்டிடத்தில் 3 நிமிட வீடியோவை ஒளிப்பரப்பு செய்ய இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.50 லம்சம் செலவாகும் என கூறப்படுகிறது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வாழ்த்துகள் என் அன்பே' என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.