கோவையில் கத்தை கத்தையாக ரூ.1.8 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் - போலீஸ் அதிரடி!
கோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சி நகரம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. கேரளா மற்றும் கோவையில் ரூ. 2000 கள்ள நோட்டு புழக்கத்தில் சிலர் விடுவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கேரள போலீஸ் தனிப்படையினர் நேற்று கோவை வந்து கரும்புக்கடை, வள்ளல் நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் (24) என்பவரை தமிழகக் காவல்துறை மற்றும் கேரள காவல்துறை கூட்டு முயற்சியால் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் (32) என்பவர் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ. 1.8 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது? யார் யாருக்கு புழக்கத்தில் விட்டனர்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கைதான 2 பேரையும் கேரளா கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்துச் சென்றனர்.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக ரிஷாத் மற்றும் அசாருதீன் என்ற இளைஞர்களை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் கத்தை கத்தையாக ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.