ஐ.பி.எல்.- ஆல் தான் இந்தியர்களின் பின்னால் அலைகிறார்கள் - முன்னாள் வீரர்
இந்தியர்களை அவர்கள் மதிப்பதில்லை, ஏதோ ஐபிஎல் வந்ததால் நம் பின்னே அவர்கள் அலைகிறார்கள் என்றும் பூட்ஸ் கால்களை நக்குகிறார்கள் எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் நிறவெறி, இனபாகுபாடு மற்றும் இந்தியர்களின் ஆங்கில புலைமயை தவறாக சித்தரித்தல் போன்ற சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதில் நியூசிலாந்து உடனான அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட நிறவெறி மற்றும் பாலியல் ட்வீட்டுகளால் அவருக்கு கிரிக்கெட் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போது இந்தியர்களை கிண்டலடித்தது தொடர்பாக இயான் மார்கன் மற்றும் ஜோஸ் பட்லரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒலி ராபின்சன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிருப்தி தெரிவித்தாகவும், இடைக்கால தடை மீதான நடவடிக்கைக்கு அவர் உடன்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பரூக் இன்ஜினியர் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்"க்கு அளித்த பேட்டியில் "போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்தில் தலையிடுவதே தவறு என நினைக்கிறேன் என்றும் ராபின்சனை அவர் கடுமையாக தண்டித்து இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் ராபின்சன் செய்த காரியத்துக்கு அதற்கான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் "நான் முதல் முதலாக இங்கிலாந்து வந்தபோது நான் இந்தியர் என தெரிந்ததும் என் மீதான இனவெறி பேச்சுகள் தொடர்ந்தது என்றும் ஆங்கிலம் பேசுவது குறித்து என்ன நகைச்சுவை இருக்கிறது என தெரியவில்லை, நான் இங்கிருக்கும் இங்கிலாந்து மக்கள் பேசும் ஆங்கிலத்தைவிட நான் சிறப்பாகவே பேசுவேன். அதனால் என்னிடம் யாரும் மோதமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எப்போதும் இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இன்னும் காட்டமாக பேசிய பரூக் இன்ஜினியர் "ஏதாவது இதுபோன்ற பிரச்னை எழுந்தால் இந்தியர்களை புறக்கணியுங்கள் என்ற கோஷம் தொடங்கும். இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியாவும் அப்படிதான். நாமெல்லாம் அவர்களுக்கு சில காலங்கள் முன்பு வரை ‘bloody Indians’தான். எப்போது ஐபிஎல் ஆரம்பித்ததோ அப்போதிருந்து நம் பின்னே சுற்ற ஆரம்பித்தார்கள். பணம் அதிகம் வருவதால் நம்முடை பூட்ஸ் கால்களை இப்போது நக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.