ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி - ஐசிசி அதிரடி
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.
முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கொரோனா சூழல் காரணமாக ஒவ்வொரு அணியும் "பயோ பபுள்" பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிக்க இருக்கிறது. இதன் காரணமாக ஐசிசி சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுடன் மட்டுமே வர வேண்டும்.
இவர்களுக்கான அனைத்து செலவுகளையும் ஐசிசி ஏற்கும். கூடுதல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கான செலவை ஐசிசி ஏற்காது என்றும் அவர்களுக்கான செலவை அந்தந்த அணி நிர்வாகமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி.
அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.
குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.