கிரிக்கெட் பந்துக்காக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட கிராம மக்கள்
கர்நாடகாவில் கிரிக்கெட் பந்துக்காக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.
கர்நாடகா மாநிலத்திலுள்ள ஆஃப்ஜ்லாபுரா கிராமத்தில் கிரிக்கெட் பந்து வாங்கியதற்கு பணம் கொடுக்கும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
கலபுர்கி மாவட்டத்தில் உள்ள அப்சலாபூர் தாலுகா கோபுரா கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகள் முடிந்த பின்னர் வரவு செலவு கணக்கு தொடர்பாக கிராமத்திலுள்ள இளைஞர்கள் விவாதித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்போது கிரிக்கெட் பந்து வாங்கியதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் இரு குழுக்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு குழுக்களில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக உறவினர்கள் ஒன்று சேர்ந்து மோதி கொண்டதால் பலர் படுகாயமடைந்தனர்.
நடுரோட்டில் ஆண்கள் பெண்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 ரூபாய் விலை கொண்ட கிரிக்கெட் பந்து விவகாரம் ஒரு கிராமத்தில் கலவரத்துக்கு காரணமாகியுள்ளது.
இந்த மோதல் சம்பந்தமாக கலபுரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிராம மக்கள் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது .