ஆட்சி நடத்த நாங்க வேண்டுமா? அவங்க வேண்டுமா? CPIM சண்முகம் எச்சரிக்கை
அதிகாரிகளை வைத்து ஆட்சியை நடத்த போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? என CPIM சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்த பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது சர்ச்சையான பின்னர் அந்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாணவர்கள் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்க வேண்டுமென மற்றொரு சுற்றறிக்கை வெளியாகி கடும் எதிர்ப்பிற்கு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
CPIM சண்முகம் எச்சரிக்கை
இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "இந்த பிரச்சனை வெளிவந்ததற்கு பிறகு ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறதே தவிர இவர்களை கண்காணிக்க வேண்டும் என மூல உத்தரவு வெளியிட்ட சாய்குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படவில்லை.

உயர்கல்வித்துறை செயலாளர் பல்கலைக்கழகங்களுடைய பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கை இன்றைய தேதி வரை திரும்ப பெறப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு எதற்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? தலைமை செயலாளர் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான தகுதி வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே தமிழ்நாட்டில் இல்லையா?
எங்களுக்கு தெரிந்த நிறைய திறமை வாய்ந்த தலைமை வாய்ந்த பொருத்தமான நிறைய ஐஏஎஸ் அதிகார்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
உயர்க் கல்வி ஆணையருக்கு எப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ, அதேபோல் சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? தமிழ்நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா? இதற்கு பதில் சொல்ல வேண்டிய நம்முடைய முதல்வர்.
என்னுடைய கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு இருக்கிறது, என்னுடைய கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இது போன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியவர் தமிழ்நாடு முதலமைச்சரை தவிர வேறு யாரும் கிடையாது.
இந்த ஆட்சி அமைவதற்கு ஆட்சியில் தொடர்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது.
இடதுசாரிகளுடைய ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது என்று தெரிந்ததற்கு பிறகும் இடதுசாரிகள் மீது உள்நோக்கத்தோடு இத்தகைய அறிக்கைகள் எல்லாம் அனுப்பப்படுகிறது என்றால், அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சியை நடத்த போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? இதுதான் அடிப்படையான கேள்வி. ஆகவே இந்த நடவடிக்கைகளை எங்களால் சகித்து கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.