பசுமாட்டின் வாயில் இருந்து கொட்டிய ரத்தம் .. ஈரோடு அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஈரோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கால்நடை உயிரினங்கள் பொதுமக்களால் தெரிந்தும், தெரியாமலும் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருவதும், மரணித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு கர்ப்பிணி பசு பசிக்காக கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது. ஆனால் அதனுள்ளே இருந்த வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த புகைப்படம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
இதேபோல் தமிழத்தில் திருச்சி மாவட்டத்திலும் இத்தகைய சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ் என்பவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வது வழக்கம்.
இதனிடையே சம்பவ தினத்தன்று மாடுகள் பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.அப்போ திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் மல்லிராஜ் பதறிக் கொண்டு காட்டுக்குள் ஓடியுள்ளார். அங்கே தன்னுடைய பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துவிட்டதால் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாட்டை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.