தடுப்பூசி போடவில்லை என்றால் தரிசனம் கிடையாது - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி திருமலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களை, அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்களால் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
மேலும் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.