கொரோனா இரண்டாவது அலை கைமீறிச் சென்றுவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By mohanelango Apr 15, 2021 08:01 AM GMT
Report

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா 2-வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்க, அதுகுறித்து விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை நீதிபதியைச் சந்திக்கிறார்.

தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார்.

கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்று மதியமே சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தலைமை நீதிபதியை இன்று மதியம் அவரது இல்லத்தில் சுகாதாரத் துறைச் செயலர் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.