பிரதமர் மோடி முதலில் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்தது.
ஆனால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதில், கோவிஷீல்டு மருந்தை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. அந்த வகையில், ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான இரு கொரேனா தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 1.91 லட்சம் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவிட்19 தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோபைடனும் , இந்தோனிசியாவில் அதிபர் முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர்.
நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.