இந்த பாம்பு விஷம்தான் கொரோனாவுக்கு மருந்தாம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஜரராகசு என்று அழைக்கப்படும் ஒரு வகை பாம்பின் விஷம் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய திறன் கொண்டதாக பிரேசில் விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை 75% கட்டுப்படுத்துவதாக முதல் கட்ட ஆய்வுத் தகவல் கூறுகிறது.
கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் உலகளவில் பரவி மிகப்பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. இதுவரை உலகம் கண்ட உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த கொரோனா வைரஸ் செயல்திறன் கொண்டதாக காணப்படுகிறது.
இவ்வைரஸின் மீதான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த மாதம் வெளியிப்பட்ட அறிவியல் இதழான Molecules இல், ‘ஜரரகுசு என்றழைக்கப்பட கூடிய பாம்பின் விஷம் உருவாக்கிய மூலக்கூறுகள், குரங்கின் செல்களில் கொரோனா வைரஸின் திறனை 75% கட்டுப்படுத்துகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரேசில் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாம்பின் விஷத்தை வைத்து கொரோனா வைரசுக்கு எதிரான ஆய்வை நடத்தியுள்ளனர்.
இந்த விஷத்தில் உள்ள மூலக்கூறுகள் குரங்கின் செல்களில் இருக்கும் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை தடுக்கிறதாக கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முதல் படியாக கருதப்படுகிறது.
‘பாம்பு விஷத்தின் இந்த மூலக்கூறு கொரோனா வைரஸின் மிக முக்கியமான புரதத்தை தடுக்க முடிந்தது’ என சாவ் பாலோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.