பள்ளிகள் திறப்பது கஷ்டம்தான் - இரண்டாம் அலை குறைந்தவுடன் மூன்றாம் அலை வந்துவிடும் - மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் 36ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது 12ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதால் விரைவில் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங்களிலும் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகி விட்டால் ஜூலையில் இல்லாவிட்டாலும் ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாதிப்பு குறைந்தபின்னர் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலினே தெரிவித்துள்ளார். அப்படியானால் விரைவில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலம் கனிந்துவிட்டதா என மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பாதிப்பு குறைந்தாலும் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர். கொரோனாவின் முதல் அலை முடிவுக்கு வந்தபோது பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.
ஒரு சில வாரத்திலேயே இரண்டாவது அலை ஆரம்பித்து முதலில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளை மூடியது. இதனை தொடர்ந்தே தேர்வுகளை ரத்து செய்தது. இரண்டாவது அலையின் வீரியத்தை அனைவருமே பார்த்தோம். அது பெரும்பாலும் இளைஞர்கள், நடுத்தர வயதுடையோரை அதிகம் பாதித்தது.
மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது பாதுகாப்பாக இருக்குமா என்பது குறித்து யோசிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு யோசித்துதான் முடிவெடுக்கும் என்கிறார்கள்.
கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த பின்னரே பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதற்கான காலம் இப்போது இல்லை என அவர்களது கருத்தை தெரிவிக்கின்றனர். .