வரப்போகும் கொரோனா மூன்றாம் அலை: மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்த போது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி விநியோகம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் எடுத்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில், 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை என்ற போதிலும், இரண்டாவது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட வசதிகளை அகற்றாமல் ஆக்சிஜன் வசதிகளை தொடர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில், கொரோனா மூன்றாம் அலை வரவேக்கூடாது என்றும், அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு
தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.