வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீர் - அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டர்
அமைச்சா் எஸ்.ரகுபதிக்குச் சொந்தமான புதுக்கோட்டை வீட்டில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் ஒன்று பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாமல் அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறைகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அரசு பணிகளில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு 3557 காலியிடம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. காலியாக உள்ள 3,557 இடங்களை தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் எழுத்துத் தேர்வு மூலம் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.
சிலர் அமைச்சரின் சிபாரிசு மூலம் நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து வருகின்றனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சா் ரகுபதி வீட்டில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படும் என்றும், வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது.