இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த அரியலூர் நீதிமன்றம்
திரைப்பட இயக்குனரும், நடிகருமான கவுதமனுக்கு அரியலூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.
கவுதமன்
நடிகர் முரளி நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியான "கனவே கலையாதே" என்ற படத்தின் மூலமாக இயக்குனராகவும், பின்னர் 2010-இல் "மகிழ்ச்சி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் கவுதமன். சில படங்களை இயக்கியுள்ள இவர், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட"சந்தனக்காடு" என்ற தொடரையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தான், இவர் சில ஆண்டுகள் முன்பு, தமிழ் பேரரசு என்ற கட்சியை துவங்கினார். நடைபெறும் சமூக போராட்டங்கள் பலவற்றில் பங்கெடுத்து வரும் இவருக்கு தற்போது அரியலூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீட் விவகாரம்
நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட காரணத்தால், அதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இயக்குனர் கவுதமன் பங்கெடுத்து கொண்டார். அப்போது அரசிற்கு எதிராக கருத்துக்களை இவர் தெரிவித்தார் என கூறப்பட்டு, முந்தைய அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் இயக்குனர் கவுதமன் நேரில் ஆஜராகாததால், தற்போது அவருக்கு செந்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.