மாட்டை தேடிச் சென்ற தம்பதி மின்வேலியில் சிக்கி பலி

Vellore Couple died
By Petchi Avudaiappan Oct 05, 2021 04:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

வேலூர் அருகே மாட்டை தேடிச் சென்ற தம்பதி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது அஸ்வினி என்பவருடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே கணவன்,மனைவி இருவரும் நேற்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாட்டைத் தேடிக்கொண்டு தங்களது நிலத்துக்குச் சென்றனர். ஆனால் இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், உறவினர்கள் சிலர் இருவரையும் இன்று காலை தேடிச் சென்றனர். அப்போது விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களது உடல்களுக்கு அருகே பசு ஒன்றும் இறந்து கிடந்தது.

இதுகுறித்து உறவினர்கள் திருவலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணவன் மனைவி இருவரும் பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, மின்வேலி அமைத்த நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரிடம் விசாரித்தனர். அதில், அவர் நிலத்துக்கு வந்து ஒரு வாரம் ஆனதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர் விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமாரின் நிலத்தின் வழியாகச் செல்லும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்தனர். பன்றி வேட்டைக்காக அமைக்கப்பட்ட மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.