தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதி என்ற தகுதியை வைத்து ஊழல் செய்கிறார்கள் - அண்ணாமலை!
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது "அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முன்னரே வருமான வரித்துறை சோதனை நடந்திருக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதி என்கிற ஒரு தகுதியை வைத்து ஊழல் செய்து வருகிறார்கள். வருமான வரி சோதனை பற்றி, நான் ஏதாவது சொன்னால், நான் சொல்லித்தான் சோதனை நடத்துகிறார்கள் என்று சொல்வார்கள். எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது.
திமுக பயப்படுகிறது
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சப் பணத்தை குவிக்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலுவின் பின்னணி என்ன?. அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு திமுகவில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறிதான் அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்க உள்ளோம். திமுகவை பொறுத்தவரை 30 மாத ஆட்சியில் என்ன செய்து இருக்கிறீர்கள் என மக்கள் கேட்பார்கள். தமிழகத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஆனால் கொடிக்கம்பங்கள் பற்றி திமுக பேசுகிறது. பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது" என்று அண்ணாமலை பேசியுள்ளார்.