இந்தியாவிற்கு வந்தடைந்தது ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி
இந்தியா வந்தடைந்தது ரஷ்யா நாட்டின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அசுர வேகமெடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொரோனாவுக்கு குறைந்தது லட்சக்கணக்கில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பதிவாகி வருகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷியல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்நிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.