கொரோனா தடுப்பூசியின் விலையைத் தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயம் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா தடுப்பூசி விலையைத் தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி தட்டுப்பாடு ஆகியவற்றின் அவசியங்கள் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட வழக்கானது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் மற்றும் நவீந்தர் பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,
'கொரோனா தடுப்பூசி விவகாரம் அனைத்தும் மத்திய அரசின் வசம் தான் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான தடுப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். நாட்டில் உள்ளஅனைத்து குடிமக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் இலவசமாக தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கருணை அடிப்படையில் அதனை விநியோகம் செய்வதை நிறுத்தி, அதனை மத்திய அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி வினியோகத் திட்டத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருக்க வேண்டுமே தவிர இதில் மூன்றாம் நபர் தலையீடு இருக்கக் கூடாது.
அதேப்போன்று கொரோனா தடுப்பூசிக்கான விலையை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்வதோ அல்லது அதனை நிர்ணயம் செய்வதையோ அனுமதிக்க முடியாது. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் இதனை மேற்கொள்ளும் பொழுது அதில் சமநிலைத் தன்மை இருக்கும் என்பதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்'.
இவ்வாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.