தமிழகத்தை மிரட்டும் கொரோனா - சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பால் மக்கள் பீதி
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்று 2,121 பேருக்கு தொற்று அதிகரித்து 6,983 ஆக பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் மூடல் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,67,432 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,07,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 721 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 3,759 பேருக்கும், செங்கல்பட்டில் 816 பேருக்கும், திருவள்ளூரில் 444 பேருக்கும், கோவையில் 309 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 22,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.