கொரோனா இரண்டாவது அலை..அதிகரித்து வரும் வேலை இழப்புகள்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது,இதன் காரணமாக பல துறைகளில் மீண்டும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லட்சம் பேர் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். அதுவும் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் அசுர வேகத்தில் பரவி மக்களை திண்டாட வைத்துள்ளது.
குறிப்பாக இந்த கொரோனா தாக்கத்தின் காரணமாக வேலை இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மையின் விகிதம் 8 சதவீதத்தை எட்டியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால், வேலையின்மையின் விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் வேலையின்மை மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்தது. தொற்று அதிகரித்துள்ளதால் ஏப்ரலில் 7.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. வைரஸ் இன்னும் தீவிரமாகப் பரவுவதால் மே மாதத்தில் வேலையிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 70 லட்சம் பேர் வேலை இழப்பை சந்திக்கவுள்ளனர்' எனத் தெரியவந்துள்ளது.