தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

corona-lockdown
By Nandhini Apr 16, 2021 04:12 AM GMT
Report

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவியது.கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் சில கட்டுப்பாடுகளை விதித்தன. கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தபோது மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகளை அறிவித்தன.

அதனையடுத்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். ஆனால், தற்போது கொரோனாவின் 2ம் அலை மீண்டும் அசுர வேகத்தில் பரவி வந்து கொண்டிருக்கிறது. மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை ஒரே நாளில் 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் பதிலளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது.

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? | Corona Lockdown

திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது.