இங்கிலாந்தில் ஐபிஎல் கிரிக்கெட்: கெவின் பீட்டர்சன் விருப்பம்

corona england ipl kevin petersen
By Praveen May 08, 2021 10:48 AM GMT
Report

ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் செப்டம்பர் மாதத்தில் நடத்துங்கள் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன.

ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இதுபற்றி தெரிவித்ததாவது,

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறேன். இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு சிறிது இடைவெளி இருக்கிறது. அனைத்து இந்திய, இங்கிலாந்து அணிகளின் முன்னணி வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள்.

இங்கிலாந்தில் செப்டம்பர் இறுதியில் அற்புதமாக இருக்கும். மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்ஹாம், லண்டனின் இரு மைதானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபிஎல் ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கவும் வாய்ப்புள்ளது. அற்புதமான சூழல் நிலவும். லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் விளையாடியுள்ளேன். இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் வெளிநாட்டில் விளையாடுவது போல இருக்கும். அந்தளவுக்கு இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு இருக்கும் என்றார்.