தினமும் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு.. 5,000 பேர் உயிரிழப்பு - தாண்டவமாடும் கொரோனா!
சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பரவி வரும் தொற்று பாதிப்பு முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது.தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.
ஆனால், எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த விவரங்களை சீனா மறைத்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எகிறும் உயிரிழப்பு
அதில், சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர்.
அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மார்ச் மாதத்தில் நாள்தோறும் 42 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
அப்போது உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். சீனாவில் தற்போது பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.