ஊடுருவிய பிஎப் 7 கொரோனா வைரஸ் - இந்திய விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை...!
பிஎப் 7 கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதால் மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா வைரஸ்
சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனால், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நோய் முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்குள் இந்த வைரஸ் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.
விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா
பரிசோதனை இந்நிலையில், சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை நடப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.