படுக்கை வசதி இல்லை - கொரோனா நோயாளிகள் நடைபாதையில் படுத்த அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் நடைபாதையில் படுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து உள்ளது. கர்நாடகாவை பொருத்தவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பீதர் மாவட்டத்தில் படுக்கை வசதி பற்றாக் குறையால் கொரோனா நோயாளிகள் நடை பாதையில் படுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீதரில் 2822 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி இல்லாமல் உள்ளது.
பீதர் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள 750 படுக்கைகளிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மற்ற கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகள் பலரும் மருத்துவமனையின் நடைபாதையில் படுத்து இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பேசுகையில், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சுகாதார துறை சார்பில் பொதுமக்கள் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும். அதன்படி படுக்கை வசதி இருக்கும் இடங்களுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.