அதிர்ச்சி - தமிழகத்தில் ஒரே நாளில் 10,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு - 42 பேர் பலி
கொரோனாவின் 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடுங்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் வேரோடு சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அரசு அமல்படுத்தியுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், பூக்காக்கள், சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை நிபந்தனையுடன் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடிக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 20 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் உலக மக்கள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது - ‘
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 10,723 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 70,391 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 6,533 பேர் ஆண்கள், 4,190 பேர் பெண்கள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளார். 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,113ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,925 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக அதிகரித்திருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.