தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு ஆர்வம் இல்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதில் மக்களுக்கும் ஆர்வமில்லை.
கொரோனா இரண்டாவதுபுதிய அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் முகக்கவசம் அணிவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவாக செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இரண்டு வாரங்களுக்குள் 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும், என கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி பணிகள் மந்தமாகவே நடக்கிறது.ஏழு கண்காணிப்பு குழுக்கள் அமைத்தும் ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. கடந்த சில நாட்களில் மிகவும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடியிடம் கேட்ட போது, சற்று மந்தமான நிலைதான் உள்ளது. இருப்பினும் இதுவரை 50 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.