தமிழகத்தில் மீண்டும் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் - அமைச்சர் அறிவிப்பு..!
தமிழகத்தில் மே 8-ந் தேதியிலிருந்து 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நேற்று வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐஐடியில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வட மாநிலங்களில் இருந்து வந்த பணியாளர்கள் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், "டெல்லி, ஹரியானா உத்திரப்பிரதேசம் ஆகிய மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
எனவே தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் என்பது அவசியமான ஒன்று. ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்கு உறுதியானவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக ஐஐடியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலை பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பணியாட்களை அழைத்து வரும் இடைத்தரகர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாட்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக மே 8 ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது" என்று அமைச்சர் கூறினார்.