நடிகர் டி.ராஜேந்தர் நலம்பெற வேண்டி கோவிலில் பூஜை நடத்திய கூல் சுரேஷ்!
பிரபல நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் விரைந்து நலம்பெற வேண்டி கோவிலில் பூஜை செய்து கூல் சுரேஷ் பிரார்த்தனை செய்தார்.
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி.ராஜேந்தருக்கு கடந்த மே 19-ம் தேதி உடல்நலம் சரியில்லாமல் போனதால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அவரின் மகனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம். ஆனால், தற்போது அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டதனாலும், உயர் சிகிச்சைகாகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தற்போது, முழு சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் சிலம்பரசன் கூறினார்.
இந்நிலையில், டி.ராஜேந்தர் நலம்பெற வேண்டி கோவிலில் பூஜை செய்து பிரார்த்தனை செய்துள்ளார் நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ்.