ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு - ரயில் நிலையத்தை தகர்க்க திட்டமா?
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஓடும் ஆட்டோவில் குண்டு
அப்போது திடீரென ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது.சிறிது நேரத்தில் ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மங்களூரு வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசாரணையில் ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் வெடிப்பொருட்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்த கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பதற்றம்
மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அந்த பயணி தனது அடையாளத்தை மறைத்து உள்ளார். பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக இருப்பது தெரியவந்துள்ளது. இவர் அருகில் உள்ள மங்களூரு ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்து உள்ளார்.அப்போது தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்துள்ளது.
இதுபற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஆட்டோவில் என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இதனால் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார். குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.