அடுத்தடுத்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞர்கள்...
சென்னை பெரியமேடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் பலசரக்குக் கடைகள் உட்பட பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக அனைவரும் நேற்று மாலை 5 மணியளவில் கடைகளை அடைத்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல கடையைத் திறக்க வந்த பலசரக்குக் கடை நடத்தி வரும் மணிமாறன் என்பவர் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.35 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
இதேபோல் மேகலிங்கம் உள்ளிட்ட இரு வியாபாரிகளின் அடுத்த அடுத்த கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மணிமாறன் மற்றும் மேகலிங்கம் ஆகிய இருவரும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்குள்ள அனைத்து சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல் துறையினர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை IBC Tamil