தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல...பாஜகவின் அமைப்பு செயலாளர் அதிரடி
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என தமிழக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தலைவர்கள் கூட்டம்
சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில், இந்த கூட்டம் நடைபெறுகிறது என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் போன்ற கட்சியின் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை இல்லாத நிலையில், இந்த கூட்டம் துவங்கிய நிலையில், அவர் தற்போது கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுவது புதிதல்ல என கருத்து தெரிவித்துள்ளது தற்போது பரபரப்பாகி இருக்கின்றது. இதில் பாஜக எடுத்துள்ள முடிவின் வெளிப்பாடா அல்லது தொண்டர்களிடத்தில் விவாதத்திற்காக பயன்படுத்தப்படும் வார்த்தையா என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும், அதிமுக விலகிய நிலையில், அடுத்த முயற்சிகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.